jaga flash news

Tuesday 29 December 2015

கோலம் போடுதலில் மறைந்துள்ள அர்த்தங்கள் என்னவென்று பார்ப்போம்.

கோலம் போடுதலில் மறைந்துள்ள அர்த்தங்கள் என்னவென்று பார்ப்போம்.
கோலம் பலவகைப்படும். பிறந்த குழந்தையை வரவேற்க தொட்டில் கோலம்; சுபிட்சத்தை வரவேற்க இருதய கோலம், வட்டக் கோலம், பாம்புக் கோலம், மனை கோலம். கம்பிக் கோலம், தந்திரிக் கோலம், புள்ளிக் கோலம் என அடுக்கிக் கொண்டே போகலாம்.
கோலம் ஒருவகை யந்திரமாகக் கருதப்படுகிறது. அதனாலே இவை வீட்டு வாசலில் வரையப்பட்டன. மேலும் மார்கழியின் போது கோலம் போடுவது அவசியம் என்பதற்கு முக்கியக் காரணமும் உண்டு.
மார்கழி மாதத்தில் பூமத்திய ரேகையில் பல மாற்றங்கள் நிகழ்வதாக கூறுகின்றனர். இந்த மார்கழி அதாவது டிசம்பர் மாதத்தில் சூரியன் தெற்கிலிருந்து வடக்கிற்கும், ஜூன் முதல் நவம்பர் வரை வடக்கிலிருந்து தெற்கிற்கும் சூரியனின் ஓட்டம் மாறுகிறது.
இந்த மாற்றத்தின் போது பூமியினுடைய சக்தி நிலையில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த மார்கழியில் சூரியன் தட்சிணாயணத்திலிருந்து உத்தராயணத்திற்கு நகர்கிறது.
இந்த சக்தி மாற்றத்தின் போது தேவையான அறிவு, ஞானம் இருந்தால், அப்போது ஏற்படும் சக்தி சூழ்நிலையை, நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அதில் ஒரு வழிமுறைதான் இந்த கோலமிடுதல். காலையில் எழுந்து வாசலில் சாணம் பூசுவது, தூசி பறக்கும் மண்ணை திட்டமாக்குவதோடு கோலம் கலையாமல் இருக்க உதவுகிறது. ஆனால் இதில் மறைந்திருக்கும் அர்த்தம் என்னவென்றால் சாணம் ஒரு கிருமிநாசினி. இது நம் வீட்டு வாசலில் இருக்கும் கிருமிகளைக் கொல்லும்.
மேலும் சூரிய உதயத்திற்கு முன் வாசலில் கோலமிடுவது நம் உடலுக்குத் தேவையான முழுமையான பிராணவாயுவை கொடுக்கிறது. இது நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும்.
காலையிலேயே குனிந்து நிமிர்ந்து கோலம் போடுவது உங்களின் உடலில் இருக்கும் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. மேலும் இது ஒருவகை யோகாசனமும் கூட. இடுப்பை வளைத்து, கால்களை நேராக்கி, தலையை குனிந்து கோலமிடுதல் யோகாசனமாகும். இது உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
மேலும் கோலமிடும் போது நம்முடைய சிந்தனை ஒருநிலைப்படுத்தப்படுகிறது. கோலத்தின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலை, ஒரு புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளி என கோடுகளால் இணைக்கும் கோலம் உங்கள் சிந்தனையை ஒருநிலைப்படுத்தவோடு உங்கள் சிந்ததனைச் சிதறல்களை குறைக்கும் ஒரு பயிற்சியாகும். அனுதினமும் நீங்கள் இந்தப் பயிற்சியை செய்யும் போது நீங்கள் தெளிந்த சிந்தனை உடையவராக உருவாகுகிறீர்கள்.
மேலும் இந்த புள்ளிக் கோலத்தை போடும் போது உங்கள் கண் ஒரு புள்ளியை கூர்ந்து கவனிப்பதால் உங்களின் கண்பார்வையும் அதிகரிக்கின்றது. இது உங்கள் கண்களுக்கு நீங்கள் கொடுக்கும் இன்னொரு பயிற்சியாகும். அதனால்தான் நம்முடைய பாட்டிகளின் கண்பார்வை நம்மை விட கூர்மையாக இருக்கும்.
மேலும் அரிசி மாவில் கோலமிடுவது ஒரு வகை தானமே. மார்கழி மாதம் என்பது பனி, மழைக்காலம் என்பதால் எறும்பு, சிறு பூச்சிகள், மற்றும் குருவிகளுக்கு இந்த அரிசி மாவு உணவாக மாறுகிறது. கோலம் என்பது மனிதனின் உடலுக்கு நன்மை அளிக்கும் அதேவேளையில் விலங்குகளுக்கும் உணவாகட்டும் எனற தத்துவம் இந்தியர்களின் பழக்க வழக்கங்களில் மட்டுமே காணப்படும் உயரிய பண்பாகும்.
இனியும் உங்கள் வீட்டு வாசலில் ஸ்டிக்கர் கோலத்தை அலங்காரத்திற்கு ஒட்டாமல், அர்த்தமுள்ள அரிசி கோலத்தைப் போட பழகிக்கொள்ளுங்கள்.
உங்கள் வீடு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தாலும் பிரச்சனை இல்லை. உங்கள் வீட்டின் முன் இருக்கும் சிறிய வாசலில் சிறிய கோலமிட்டு அனுதினமும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

2 comments: