jaga flash news

Tuesday 29 December 2015

உலகை மாயை என்கிறார்கள். அது எப்படி?

உலகை மாயை என்கிறார்கள். அது எப்படி?
------------------------------------------
முதலில் மாயை என்றால் என்னவென்பதை தெளிவாக புரியவேண்டும். நிஜத்தில் இல்லாத ஒரு பொருள் இருப்பதாக "மனதால் கற்பனை செய்யப்டுவதே" மாயை ஆகும்.
உதாரணமாக, வீதியில் செல்கிறோம் ஒரு பாம்பு அசையாமல் உள்ளது. அருகில் சென்று பார்த்தல் அது பாம்பல்ல வெறும் கயிறு என்ற தெளிவு வருகிறதல்லவா. இதில் இல்லாத பாம்புதான் மாயை.
வெய்யிலில் கானல்நீர், மரத்தில் பேய், கம்பத்தில் திருடன், அசையும் துணியில் ஆவி............ முதலியவை மாயை. இவை எதுவுமே நிஜத்தில் இல்லை. ஆனால் இருப்பதைப்போன்ற ஒரு தோற்றத்தை மனம் கற்பனை செய்கிறது. இவை மட்டுமா, நம்மிடமும் எத்தனை எத்தனை மாயை?
கவுரவம், மானம், அவமானம், அந்தஸ்து, ஜாதி, மதம், இனம்,................. இவைகளில் ஏதாவது ஒரு பொருளை காட்டுங்கள் பாப்போம்? இவை எதுவுமே நிஜத்தில் இல்லை. அனால் மனதில், நம் கற்பனையில் உள்ளது. மானம் போயிற்று என்று கதறுகிறார்கள். ஆனால் அது எங்கே போனதென்றும், அதன் வடிவம் என்னவென்றும் தான் தெரியவில்லை.
கவுரவம் செத்துவிட்டது என்கிறார்கள். அது உயிருடன் இருந்தபோது எப்படி இருந்ததென்றுதான் யாராலும் காண முடியவில்லை. என்னே அறியாமை. என்னே முட்டாள்தனம்.
அதே போலத்தான் உலகமும். இல்லாத உலகை இருப்பதாய் நாம் காண்பதால் அது மாயை.
என்ன உலகம் இல்லையா? அப்போது பார்க்கும் நாங்கள் முட்டாளா? என்கிறீரா!!!
பொறுங்கள்.
உண்மையில் உலகம் என்ற தனிப்பொருள் இல்லை. இருப்பதாக நாம்தான் கற்பனை செய்கிறோம்.
நம் சரீரத்தை பாருங்கள். தலை,கைகள்,கால்கள்,உள்ளுறுப்புகள் என்று பல உள்ளன. ஆனால் கூர்ந்து சிந்தித்தால் இவை பல அல்ல. ஒரே வகையான அனந்தகோடி உயிரணுக்களின் கூட்டமைப்பு தான் நம் உடல் என்பது. ஒரே வகையான செல்களின் கூட்டால் தோன்றும் பலதான அமைப்புதான் நம் சரீரம். இங்கு அனைத்து செல்களும் ஒன்றோடு ஒன்று இணைந்து ஒரு உருவத்தை உண்டாகுவதால், நாம் "ஒரே சரீரமாகதான்" கருதுகிறோம்.
அவ்வாறே, எண்ணற்ற கோள்களும், நட்சத்ரங்களும், விண்கற்களும், எத்தனை எத்தனையோ சூரிய சந்திரர்களும், அசையும் அசையாதவைகளும், இன்னும் என்னெனவோ பொருட்கள் ஒன்று சேர்ந்து இருக்கும் வடிவம் தான் பிரபஞ்சம் அல்லது ப்ரஹ்மம் என்று கூறப்படுவது. இருக்கும் அனைத்துமே ஒன்றோடு ஒன்று ஈர்புவிசை, உஷ்ணம், சீதளம், வெளி, காற்று, ஆகாயம், சூனியம் முதளியவையால் இணைக்கப்பட்டே உள்ளன. ஒன்றேயான இப்பிரபஞ்சத்தை பலதாக பாவிப்பது மாயையாகும்.
அவ்வாறே பிரம்மத்தைதவிர வேறு அல்லாததை, பிரம்மத்தை உலகமாக நாம் பாவிப்பது, கற்பனை செய்வது மாயை. பிரம்மத்தில் உலகம் என்பது நம் கற்பனை. உலகம் நம் கற்பனை. ஆகவே உலகம் மாயை!!!

1 comment:

  1. அய்யா...வெ.சாமி அவர்களுக்கு நமஸ்காரம்.

    அய்யா...மாயை பற்றி நானும் அளிக்கிறேனே...

    மாயை என்பதை...தளை எனவும் கூறலாம்.

    மாயா என்ற வடசொல்... தமிழில் மாயை என மருவியுள்ளது.

    மா என்பது... ஒடுங்குதல்.
    யா என்பது .... வருதல்.
    எனவே, உலகம் ஒடுங்குவதற்கும், மீள வருவதற்கும் இடமாய் உள்ளது என்பது மாயை என்ற சொல்லின் நேர்பொருள்.

    குடமாகிய காரியத்திற்குக் களி மண் முதற் காரணமாதல் போல....
    உலகமாகிய காரியத்திற்கு மூலப் பொருளாய் இருப்பது... மாயை.

    மேசை மீது சிறிது தண்ணீர் சிந்திவிட்டது என்று கொள்வோம்.சில மணி நேரம் கழித்துப் பார்த்தால்... சாந்திய நீர் அங்கே காணப்படாது. காணப்படாததற்கு என்ன காரணம் எனில்....அது ஆவியாக மாறிக் காற்றில் கலந்து உள்ளது என்பது தான் உண்மை. அது அழிந்து விடவில்லை.

    இவ்வாறு... எல்லாப் பொருள்களும் அருவமாகி, ஒரே வகையான ஆற்றல் வடிவத்தில், இருக்கக் கூடியவை என்று கொண்டு, அவ் ஆற்றல் உருவத்திற்குத் தான்... "மாயை" என்ற பெயர் சைவத்தில் இடப்பட்டுள்ளது.

    தூலமாய் நின்ற காரியப் பொருள்கள் படி முறையாக ஒன்றை விட ஒன்று சூக்குமமாய் மாறிக் கொண்டு போகும் பொழுது முடிந்த சூக்கும நிலையே மாயை எனப்படுகிறது.

    ReplyDelete